Tuesday, 15 March 2011

குரு தட்சிணாமூர்த்தி - 2


சிவயோகியாரின் வரவால் வருத்தம் நீக்கி, சிவ சிதம்பரம் பிள்ளை சிவயோகியாரின் முன் சென்று நமஸ்கரித்து கைகட்டி நின்று "ஸ்வாமின்! ஸ்ரீ அண்ணாமலைப் பெருமானின் அனுக்ரகத்தால் தோன்றிய அடியேனுடைய அருமைப் பாலகன் ஒருவன் ஐந்து வயதாகியும் வாய் திறந்து பேசாமல் ஊமையாகவே இருக்கிறான்.  அக்குழந்தை மாத பிதா மனம் குளிர மழலைச் சொல் வழங்கும்படி அனுக்ரகம் செய்ய வேண்டும்" என்று பிரார்த்தித்தார்.

துறவியாக வந்த பெருமான் "அந்த அற்புத குழந்தையை நாம் பார்ப்போம்" என்று கூற, சிவ சிதம்பரம் பிள்ளை யோகியாரை வீட்டுக்குள் அழைத்து சென்று தம் தவப்புதல்வனை காட்டினார். அந்த நேரத்தில், அக்குழந்தை பத்மாசனம்  போட்டு, கண்களை மூடி நிஷ்டையில் இருக்க கண்ட சிவ யோகியர், சிவ சிதம்பரம் பிள்ளையை நோக்கி, "இக்குழந்தை பெற்றோர்களாகிய உங்களையும், உங்கள் குலத்தார்களையும், உலகத்தில் உள்ள பக்த ஜனங்களையும் நற்கதியில் சேர்க்கும் பொருட்டு உங்களுக்கு பிள்ளையாக தோன்றி இருக்கிறான். இவன் ஊமை அல்லன். இப்பொழுது நீவிர் உம் பாலகனோடு பேசு" என்றவுடன், சிவ சிதம்பரம் பிள்ளை

"அப்பா குழந்தை! ஏன் கண்களை மூடிக் கொண்டிருக்கிறாய்?" என வினவ

அதற்கு அந்த திரு புதல்வன் "சும்மா இருக்கின்றேன்" என விடை இறுத்தான்.

துறவி "சும்மா இருக்கின்ற நீ யார்?" என்று வினவ

தனது நிலை கலையாது " நீயே நான்.  நானே நீ!" என பதில் இருத்தது.

"சத்தியம்! சத்தியம்!" என்று கூறி துறவி விடை பெற்றார். வந்தது தாம் வணங்கும் "திருஅண்ணாமலையார்" என்று குறிப்பால் உணர்ந்து போற்றி வந்தனர்.

ஒரு நாள் சிவ சிதம்பரம் பிள்ளை தன் மனையாளிடத்தில் "யான் திரிசிரபுரம் சென்று தாயுமானவரை தரிசித்து வருகிறேன். அதுவரை குழந்தைகளை பத்திரமாக பார்த்துகொள்க" என்று சொல்லியபடி விலக,

"அய்யா! தங்களை பார்க்க இரு உறவினர்கள் இன்னும் பத்து நாழிகைக்குள் வருவார்கள்" என்றனன்.

குறிப்பறிந்து, சிவ சிதம்பரம் பிள்ளை, தன் பயணத்தை நிறுத்திகொண்டார்.  உறவினரும் குறித்தபடி வந்தனர்.

இவ்வாறு எல்லா விஷயங்களையும் முன் கூட்டியே அந்த குழந்தை சொல்லி வந்ததால், பெற்றோர்கள் எக்காரியமும், தம் தவப்புதல்வனிடம் தெரிவித்து, அவர் உத்தரவுப்படியே நடந்து வருவாயினர்.

ஒரு சமயம் தில்லைத்தலம் சென்று ஆருத்ர தரிசனம் காண விரும்பிய சிவசிதம்பரம் பிள்ளை, சுவாமிகளை அணுகி விடை தரல் வேண்டும் எனக் கோரினார்.

அதற்கு "நாளை இருபது நாழிகை அளவில் உமது மாதா தேகவியோகம் அடைகின்றாள்" என அருளிற்று.

"என் மாதா எந்த வித நோயும் இன்றி சரீர சவுக்கியத்துடன் இருக்கின்றாளே! எந்த நிமித்தத்தால் தேக வியோகம் அடைவாள்?" என்று பிள்ளை வினவ

"புரை ஏறி விக்கல் உதயமாவதால்" என்றார் சுவாமிகள்.

சுவாமிகளின் திரு வாக்கின் படியே மறுநாள் சிவசிதம்பரம் பிள்ளையின் மாதா தேகவியோகம் (சமாதி) ஆயினள்.

நமசியாயம் என்னும் இளைய மைந்தரைப் பள்ளிக்கு வைக்கும் பருவம் வந்தது.  அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்ய, சுவாமிகள் தகப்பனாரை அழைத்து " நம்மை ஏன் பள்ளிக்கு வைக்கவில்லை?" என்று வினவினர்.

"சகலமும் தெரிந்த சர்வக்னஜர் ஆகிய சுவாமிகளையும் பள்ளிக்கு வைக்க வேண்டுமோ?  வேண்டுமாயின் அதன்படியே ஏற்பாடு செய்கிறேன்" என்று சொல்லி அதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

சுவாமிகள், பள்ளிக்கு சென்று வந்தாலும் , எதிலும், மற்ற குழந்தைகளுடன் விளையாட போகாமல், வேறு ஒன்றையும் நினைக்காமல்,   சுவடியை கையில் ஏந்தியபடி பார்த்து கொண்டிருப்பார்.  சில நேரம், சுவடியை கட்டி முன்பாக வைத்து விட்டு, கண்ணை மூடி நிஷ்டையில் அமர்ந்திருப்பார்.  ஆசிரியர் "தம்பி கண்ணை மூடி கொண்டிருக்கிறாயே! படிக்க வேண்டாமா?" என்று வினவ "படித்தாயிற்று!" என்று பதில் சொல்வார்.  "படித்ததை சொல் கேட்ப்போம்" என்றிட, சுவாமிகள் சுவடியை பாராமல், பிழையின்றி ஒப்புவிப்பார்.  மிகவும்  சந்தோஷம் அடைந்த ஆசிரியர் இன்னொரு சுவடியை கொடுக்க, அதை உற்று பார்த்துவிட்டு நிஷ்டையில் அமர்ந்துவிடுவார்.  "புதிய பாடம் படித்தாயிற்றா?" என்று ஆசிரியர் கேட்க "ஆயிற்று" என்று பதில் வரும். 

ஒரு நாள் சுவாமிகள் ஆசிரியரை நோக்கி "அய்யா! உங்கள் குழந்தை வீட்டுத் திண்ணையிலிருந்து கீழே விழுந்ததால் கை ஒடிந்து விட்டது.  போய் பார்த்து வாருங்கள்" என்று கூறினார்.

No comments:

Post a Comment