மகான்கள் வாழ்க்கையில் ஊடுருவி சென்று அவர்கள் வாழ்ந்த விதத்தை மறுபடியும் நம் மனக்கண் முன் காண்பதும், அவர்கள் அருளிய, எளிய, ஆனால் மிகப்பெரிய உபதேசங்களை உணர்ந்து, நம் வாழ்வில் நடைமுறை படுத்தி, அதில் இன்புறுவது என்பது, ஒரு சிலருக்கே அமைகிறது. ஒரு மகானின் வாழ்கையை படிக்க நேரும் போது பல சக்தி நிறைந்த புண்ணிய தலங்களையும் நாம் அறிய நேரும். என்றேனும் அந்த இடங்களுக்கு செல்லும் போது படித்து உணர்ந்தது நம் மனதில் நின்றால், பூரிப்புடன் இருந்துவிட்டு வரலாம். சமீபத்தில் குரு தக்ஷிணாமூர்த்தியின் அவதாரத்தில் நடந்த சில விஷயங்களை படிக்க நேர்ந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்து > இந்த தொடர்!
தமிழகத்தின் வடகிழக்கு பகுதியில் கீழாலத்தூர் என்னும் பெயர் கொண்ட சிற்றூரில் வேளாளர் மரபில், கல்வி, அறிவு, ஒழுக்கங்களில், பக்தியில் சிறப்புற்ற சிவசிதம்பரம் பிள்ளை என்பவர், தன் மனைவி மீனாம்பிகை அம்மையாருடன் ஒன்றுபட்ட கருத்துடன் இல்லற தர்மத்தை நடத்தி வந்தார்.
இருவரும் சிறந்த சிவ பக்தர்கள். நீண்ட காலம் அவர்களுக்கு சந்ததி இல்லாமல் இருந்தது. இம்மை மறுமை பயன்களை அளிக்கத்தக்க நன் மகப்பேற்றை வேண்டி, பல நோன்புகள் இயற்றியும், புண்ணிய ஷேத்திர யாத்திரை, தீர்த்த ஸ்நானம், ஸ்தல வாசம், மூர்த்திகள் தரிசனம், பெரியோர் சேவை முதலியன செய்து வரும் நாளில், நானிலம் போற்றும் திருவண்ணாமலை எனும் ஷேத்ரத்தை அடைந்தனர். அத்தலத்தில் சில நாட்கள் வாசம் செய்து அங்குள்ள தீர்த்தங்களில் மூழ்கியும், கிரி பிரதட்சிணம் வந்தும் மகப்பேறும் விரும்பிய மனத்தினராய் இருந்து வந்தனர்.
ஒரு நாள் இரவு அண்ணாமலை பெருமான் இருவர் கனவிலும் ஒரு அடியவர் உருவில் தோன்றி "மகப்பேறு இல்லாத உங்கள் மனக்குறையை நாமே வந்து நீக்குவோம். நீவீர் நும் ஊரைச் சேருங்கள்" என அருளினார்.
உறக்கம் கலைந்து எழுந்த இருவரும் தாம் கண்ட கனவை கலந்து பேசி, மறு நாள் காலையில் ஆலயம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்து விடை பெற்றனர்.
ஊருக்கு சென்ற பத்தாவது நாளில் மீனாம்பிகை கருவுற, பத்தாவது மாதம் ஒரு ஆண் மகவு பிறந்தது. சிவ சிதம்பரம் பிள்ளை குழந்தைக்கு ஜாதக கன்மங் களை முறையாகச் செய்து ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் அருளால் தோன்றிய மகவு என்பதால் "அருணாசலம்" என்று அந்த குழந்தைக்கு பெயர் சூட்டினார்.
பொக்கிஷத்தை பாதுகாப்பதுபோல் அந்த குழந்தையை வளர்த்து வர, இரண்டாவது வருடத்தில் மீனாம்பிகை அம்மையார் மீண்டும் கர்பமுற்று மற்றொரு புத்திரனை பெற்றார். அப்புத்திரனுக்கு "நமச்சிவாயம்" என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தனர்.
மூத்த மகனான அருணாசலம், பசித்து அழுவது, ஏதேனும் கண்டு அலறுவது, எதனை கண்டாவது சிரிப்பது போன்றவை இல்லாமல், பாயில், தொட்டிலில் கிடத்தினால் சில வேளை கண்களை திறந்தும், பல நேரம் கண்களை மூடியும் இருப்பான். எதையும் உற்று பாராமலும், மௌனமாகவும், சயநித்திருப்பான். மாதா மடியிருத்தி மார்புக் காம்பை வாயில் வைத்தால் சுவைத்து பால் குடிப்பதும், குப்புற விழுந்து, எழுந்து நடக்கும் காலங்களிலும், சில சமயங்களில் பத்மாசனம் போட்டும் கண் மூடி நிஷ்டையில் இருப்பான். பேரமைதியும், மௌனமும் அவன் சொத்து.
அருணாச்சலேஸ்வரர் அருளால் பிறந்த குழந்தை, ஐந்து வயதாகியும் வாய் திறந்து பேசாமல் இருந்ததில், பெற்றோர்கள் மிகுந்த மனக்குறை பட்டு இதுவும் நம் தவகுறைவோ என்று நினைத்து, அருணாச்சலேஸ்வரரை த்யானித்து இருந்தனர்.
அருணாச்சலேஸ்வரர், இவர்கள் மனக்குறை தீர்க்கும் பொருட்டு, சடாமுடியும், துவராடையும், விபுதி, ருட்ராக்ஷமும் தரித்து, புனித துறவி வேடம் பூண்டு சிவ சிதம்பரம் பிள்ளை வீட்டை அடைந்தார்.
No comments:
Post a Comment